வாகை(Siris) - மருத்துவ குணங்கள்

 வாகை(Siris)

மருத்துவ குணங்கள்



        கோடைகாலத்தில் அதிகமாக கிடைக்கும் மூலிகை வாகை. நிழல் தரும் மரமான இது வெண்ணிற பூக்களை உடையது. பூஞ்சை காளான், நோய் கிருமிகளை அழிக்க கூடியது. சர்க்கரை நோயை குறைக்கும். பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மை உடையது. தோல்நோய்களுக்கு மேல்பற்று மருந்தாகிறது. சர்க்கரை நோய், வயிற்று கோளாறுக்கு மருந்தாக விளங்குகிறது. இலை, பூக்கள், பட்டை என இம்மரத்தின் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாகிறது.

வாகை பூக்களை பயன்படுத்தி கழிச்சல், வயிற்று வலி, வெள்ளைப்போக்கு பிரச்னைக்கான மருந்து தயாரித்தல்

தேவையான பொருட்கள்: வாகை பூக்கள், தேன்.

செய்முறை:
            ஒரு பாத்திரத்தில் வாகை பூக்கள், மொட்டுகளை எடுத்து நீர்விட்டு வேக வைக்கவும். இதை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடித்துவர வயிற்றுவலி, வயிற்றுபோக்கு சரியாகும். வெள்ளைப்போக்கு குணமாகும். உள் உறுப்புகளுக்கு பலம் தருவதாக அமைகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட வாகை, நுரையீரல் கோளாறு, ஆஸ்துமா பிரச்னையை தீர்க்கும். தொழுநோய்க்கு அற்புதமான மருந்தாகிறது.

வாகை இலையை பயன்படுத்தி கைகால், மூட்டுகளில் வலி, வீக்கத்தை சரிசெய்யும் மேல்பூச்சு மருந்து தயாரித்தல்

தேவையான பொருட்கள்: வாகை இலை, விளக்கெண்ணெய்.

செய்முறை:
            ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் விடவும். இதில், வாகையின் துளிர் இலைகளை போட்டு வதக்கவும். ஆறவைத்து இளம் சூடாக மேல் பற்றாக கட்டி வைத்தால் கைகால் மற்றும் மூட்டு வீக்கம், வலி சரியாகும். யானைக்கால், விரைவீக்கத்துக்கும் இது மருந்தாகிறது. சாலையோரங்களில் நிழல்தரும் அற்புதமான மரமாக வாகை விளங்குகிறது. இதன் இலைகள் வாத நோய்களை குணப்படுத்துகிறது.

வாகை விதை, மொட்டுகளை பயன்படுத்தி ஆறாத புண்களை ஆற்றும் மருந்து தயாரித்தல்

தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், வாகை மரத்தின் காய்.

செய்முறை:
            பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். வாகை மரத்தின் காய்களை உடைக்கும்போது கிடைக்கும் விதைகள், மொட்டுகளை எண்ணெய்யுடன் சேர்த்து தைலப்பதமாக காய்ச்சி எடுக்கவும். இதை வடிகட்டி ஆறவைத்து பூசிவர நாள்பட்ட புண்கள் வெகுவிரைவில் குணமாகும். வீக்கம் வற்றும். வீக்கத்தை கரைக்கும் தன்மை கொண்டது வாகை விதைகள். இலைகள் தோல்நோய்களுக்கு மேற்பற்றாக விளங்குகிறது. வாகையின் பூக்கள் நெஞ்சக சளிக்கு மருந்தாகிறது. கோடைகாலத்தில் எளிதாக கிடைக்கும் வாகையை பயன்படுத்தி நலம் பெறலாம்.

வாகை இலை பயன்

    கண் வியாதிகள், கண்கள் சிவப்பது முதல் கண் எரிச்சல், கண் அரிப்பு, நீர் வடிதல், பார்வை மங்குதல் மற்றும் மாலைக்கண் வியாதி இவற்றுக்கு வாகை இலைகளில் தயாராகும் தேநீர், சிறந்த தீர்வளிக்கிறது.

சிறிது வாகை இலைகளை நன்கு அலசி, அத்துடன் சிறிது சீரகம் சேர்த்து, இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு, நன்கு காய்ச்சி, பாதியாகச் சுண்டியதும், பனங்கற்கண்டு சேர்த்து பருகிவர, கண்களின் பார்வைத்திறன் அதிகரிக்கும். இதனால், கண்கள் வலுப்பட்டு, மாலைக்கண் வியாதி, கண் சிவப்பது, நீர் வடிதல் உள்ளிட்ட கண் வியாதிகளின் பாதிப்புகள் அகலும்.

சிறிதளவு விளக்கெண்ணையில், ஐந்தாறு வாகை இலைகளை வதக்கி வைத்துக்கொண்டு, ஆறியபின் அவற்றை, கண்களை நன்கு தண்ணீர் விட்டு அலசியபின், கண்களை மூடி, கண் இமைகளின் மேல், வதக்கிய வாகை இலைகளை வைத்துக் கட்டி, சிறிது நேரம் கழித்து, கட்டைப் பிரிக்க, கண் வலிகள், கண் வீக்கம், கண் எரிச்சல் உள்ளிட்டவை சரியாகிவிடும்.

வாகை மலர் மருந்து

        வாகை மரத்தின் நறுமணமிக்க மலர்களைக் கொண்டு, விஷக்கடிகளுக்கான மருந்தை தயாரிக்கலாம். சிறிதளவு வாகை மலர்கள் அல்லது மொட்டுக்கள் இவற்றுடன் சிறிது மிளகைப் பொடி செய்து, இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு, சூடாக்கி, பாதி அளவு வந்ததும் ஆற வைத்து, தேனைக் கலந்து பருகிவர, உடலில் கை கால்களில் ஏற்பட்ட குத்துவது போல இருந்த வலிகளெல்லாம் மாயமாகும், உடலில் சேர்ந்த விஷங்கள் முறிந்துவிடும், விஷக்கடிக்கு மருந்தாகவும் அமையும்.

0 Comments